போபால்: மத்தியப் பிரதேசத்தில் தனியார் மருத்துவமனையில் கட்டணத்தை செலுத்தாததால் முதியவரை கட்டிலில் கட்டி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், ஷாஜாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதியவர் ஒருவர் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அப்போது, முதியவரின் மகள் ரூ.5,000த்தை மருத்துவமனையில் டெபாசிட் செய்தார். அதன் பிறகே, மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். தொடர்ந்து மேலும் சில நாட்களுக்கு முதியவருக்கு மருத்துவமனையில் தங்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கூடுதலாக ரூ.11,000ம் கட்டணத்தை மருத்துவமனை நிர்வாகம் கேட்டுள்ளது. ஆனால், முதியவரின் மகளிடம் பணம் இல்லை. இதனால், பணத்தை எடுத்து வரும் வரை முதியவரை வெளியே செல்ல அனுமதிக்க மறுத்த மருத்துவமனை நிர்வாகம், தப்பிச் செல்லாத வகையில் அவரது கால்களை கட்டிலில் கயிறு மூலம் கட்டி வைத்தது.