புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதற்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள், தேர்தல் பிரசார யுத்திகளை காங்கிரசும், பாஜ.வும் இப்போதே தொடங்கி விட்டன. நாடே கொரோனா பீதியில் ஆழ்ந்துள்ள நிலையில், இத்தேர்தலுக்கான டிஜிட்டல் வழி பிரசாரத்தை தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பாஜ முன்னாள் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா நேற்று தொடங்கி வைத்தார். பாட்னாவில் காணொளி காட்சி மூலமாக இது நடந்தது.இதில், பீகார் மக்களிடையே ‘ஆத்மனிர்பர் பாரத்’ என்ற தலைப்பில் அமித்ஷா பேசியதாவது:பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சியின்போது மாநிலத்தின் வளர்ச்சி 3.9 சதவீதமாக இருந்தது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போது 11.3 சதவீதமாக இது உயர்ந்துள்ளது. பீகாரில் இருந்த காட்டாட்சி, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜ கூட்டணி ஆட்சியில்தான் மக்கள் ராஜ்ஜியமாக மாறியது.