இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று செப்டம்பர் மாதத்தின் மத்தியில் முடிவுக்கு வரலாம் : மத்திய சுகாதார அமைச்சகம் ஆய்வில் கணிப்பு!!

டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று செப்டம்பர் மாதத்தின் மத்தியில் முடிவுக்கு வரலாம் என சுகாதார அமைச்சகத்தின் இரு பொது சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கணிதமுறை மாதிரி ஆய்வின் படி அவர்கள் இதைக் கூறுவதாகத் தெரிவித்துள்ளனர். கண்ணுக்குத் தெரியாது. ஆனால் அதன் வீரியமோ உலகையே கதிகலங்க வைக்கிறது. அதுதான் கொரோனா வைரஸ். கொரோனாவால் உலகளவில் மோசமாக பாதித்த நாடுகள் பட்டியலில் இத்தாலி, ஸ்பெயினை ஒரே நாளில் பின்னுக்கு தள்ளிவிட்டு, 5வது இடத்துக்கு இந்தியா முன்னேறி உள்ளது. தற்போது, இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரமாக உயர்ந்துள்ளது.  

இந்நிலையில், கொரோனா வைரஸ்தொற்று செப்டம்பர் மாதத்தின் மத்தியில் முடிவுக்கு வரலாம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு குறித்த விவரங்கள் எபிடெமியாலஜி இண்டெர்நேஷனல் என்னும் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வினை மருத்துவர் அனில் குமார் மற்றும் ரூபாலி ராய் ஆகிய இரு பொது சுகாதார மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர். கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, தொற்றால் இறந்தவர்கள் மற்றும் குணமடைந்த எண்ணிக்கையுடன் சரிசமமாகும்போது, அதன் குணகம் (Coefficient) 100 சதவிகித வரம்பை எட்டி, தொற்றுப்பரவல் மறையும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

பெய்லி கணிதமாதிரி முறையில் செய்யப்பட்ட இந்த ஆய்வில், தொற்று மற்றும் குணமடைதல் என்னும் இரண்டு கூறுகளும் உட்படுத்தி, பெருந்தொற்றின் முழு அளவையும், பரவலான தன்மையையும் கணக்கில் எடுத்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.”தொடரும் தொற்று” என்னும் மாதிரியில் அடிப்படையில் இந்த மாதிரி ஆய்வு கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது குணமடைந்தோ அல்லது இறந்தோ போகும்வரை பாதிக்கப்பட்ட நபர் தொற்றை மற்றவர்களுக்கு பரப்புகிறார்.

பாதிக்கப்பட்ட விகிதம் மற்றும் குணமடைந்தவர்களின் விகிதம் ஆகிய இரண்டுக்கு இடையிலான ரிக்ரெஷன் பகுப்பாய்வும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய, மாநில, மாவட்ட நிர்வாகங்களுக்கு கோவிட் தொடர்பான நடவடிக்கைகளுக்கு இந்த ஆய்வு ஒரு கருவியாக இருக்கும் என்றும், தனிமைப்படுத்துதல், பெருந்தொற்று மேலாண்மை மற்றும் தொற்றுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சரியாக மேற்கொண்டால் கோவிட் பாதிப்பைக் கட்டுக்குள் வைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆய்வுக்கான வரம்புகளையும் குறிப்பிடும் நோக்கில், இது மிகக் குறிப்பிட்ட கால இடைவெளியில் கிடைத்த தரவுகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும் எனவும் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: