சென்னை: சென்னையில் நாள்தோறும் 1000 பேர் பாதிக்கப்படுவதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதனால், கொரோனா தொற்று உறுதியானவர்கள் மருத்துவமனையில் சேர முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சென்னையில் மட்டும் கடந்த சில நாட்களாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் 30,152 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 16,395 பேர் குணமடைந்த நிலையில், 13,503 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10,223 பேருக்கு சென்னையில் மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.