பொதுத்தேர்வு எழுதும் 10ம் வகுப்பு மாணவர்கள் ஹால் டிக்கெட் பெற ஏதுவாக 109 சிறப்பு மாநகர பேருந்துகள் இயக்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பொதுத்தேர்வு எழுதும் 10ம் வகுப்பு மாணவர்கள் ஹால் டிக்கெட் பெற ஏதுவாக 63 வழித்தடங்களில் 109 சிறப்பு மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் ஜூன் 15ம் தேதி முதல் தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. தற்போது மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கும் பணியை பள்ளிக்கல்வித்துறை செய்து வருகிறது. ஆன்லைன் மூலம் ஹால் டிக்கெட்டுக்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு வசதி இல்லாத மாணவர்கள் பள்ளிக்கூடம் சென்று பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நான்கு மாவட்ட மாணவர்கள் பள்ளிக்கூடம் சென்று ஹால் டிக்கெட் பெறுவதற்காக 63 தடங்களில் 109 சிறப்பு பேருந்துள்கள் இயக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பேருந்துகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்றும், பேருந்துகளில் பள்ளிக்கல்வித்துறை என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பேருந்துக்கள் காலை 9 மணியளவில் புறப்பட்டு, மாலை 4 மணிக்கு மறுமுனையில் இருந்து புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என பள்ளக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: