சென்னை: பொதுத்தேர்வு எழுதும் 10ம் வகுப்பு மாணவர்கள் ஹால் டிக்கெட் பெற ஏதுவாக 63 வழித்தடங்களில் 109 சிறப்பு மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் ஜூன் 15ம் தேதி முதல் தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. தற்போது மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கும் பணியை பள்ளிக்கல்வித்துறை செய்து வருகிறது. ஆன்லைன் மூலம் ஹால் டிக்கெட்டுக்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு வசதி இல்லாத மாணவர்கள் பள்ளிக்கூடம் சென்று பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.