10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கான ஹால் டிக்கெட் பெற ஏதுவாக 'பள்ளி கல்வித்துறை'என ஸ்டிக்கருடன் 109 மாநகர பேருந்துகள் இயக்கம் ; 24 பயணிகள் மட்டுமே அனுமதி

சென்னை : மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பெற ஏதுவாக, 63 வழித்தடங்களில் 109 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கணேசன் தகவல் தெரிவித்துள்ளார்.

மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கணேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பில்

10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வானது, வரும் ஜூன் 15ம் தேதியன்று தொடங்குகிறது. தேர்வு எழுதிடும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை முதல் 13ம் தேதி வரையில் வழங்கப்படுகிறது.  இதனை முன்னிட்டு, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில், மாநகர் போக்குவரத்துக் கழக எல்லைக்குட்பட்ட பகுதிகளில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வசதிக்காக 63 வழித்தடங்களில் 109 மாநகர் போக்குவரத்துக் கழக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இச்சிறப்புப் பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் கட்டணமில்லாமல் பயணம் செல்லலாம். மேலும் ஆசிரியர்கள் பயணச்சீட்டு பெற்று பயணித்திடல் வேண்டும்.பிற பயணிகள் பேருந்துகளில் பயணம் செய்திட அனுமதி இல்லை.  மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், இச்சிறப்புப் பேருந்துகளை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அறிந்து கொள்ள ஏதுவாக, பேருந்தின் முகப்பில் பள்ளி கல்வித்துறை என்ற ஸ்டிக்கர் ஒட்டுப்பட்டுள்ளது.  காலை 9.00 மணியளவில் பேருந்துகள் புறப்பட்டு, பின்னர் மாலை 4.00 மணிக்கு மறுமுனையிலிருந்து புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

கோவிட்-19 தொற்று நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளவாறு, இப்பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதோடு, தனி நபர் இடைவெளியினையும் அவசியம் பின்பற்றிடும் பொறுட்டு, இப்பேருந்துகளில்  முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ள வழிக்காட்டுதலின் அடிப்படையில், 24 பயணிகள்(60 சதவிகிதம்) பயணம் செய்திட அனுமதிக்கப்படுவார்கள். மேலும், பேருந்துகளில் பின்புறமாக ஏறி முன்புறமாக இறங்கிட வேண்டும்,.

மேற்கண்ட இத்தகவலை, மாநகர் போக்குவரத்தக் கழக மேலாண் இயக்குநர் கோ.கணேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன எனவும் செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: