103 பள்ளிகளில் குடிநீர் வசதி; 107ல் கூடுதல் வகுப்பறைகள் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த 95 கோடி

* உட்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளை  பொதுப்பணித்துறை மேற்கொள்ளும்.  இப்பணிகளுக்கு டெண்டர் விட்டு வரும் நிலையில் இந்தாண்டுக்குள் பணிகளை முழுவதுமாக முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

சென்னை: அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ₹95 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இப்பணிகளை இந்தாண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. இதற்கான பணிகளை மேற்கொள்ளும் வகையில் தமிழக அரசு சார்பில் 95.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 17.69 கோடி செலவில் 106 கூடுதல் வகுப்பறைகள், 13.75 கோடி செலவில் 83 அறிவியல் ஆய்வகங்கள், 14.21 கோடி செலவில் 84 கலை மற்றும் ஓவிய அறைகள், 2 கோடி செலவில் 103 பள்ளிகளில் குடிநீர் வசதி, 4.49 கோடி செலவில் 105 மாணவர்களுக்கான கழிவறை, 5.87 கோடி செலவில் 123 மாணவிகளுக்கான கழிவறை, 8.46 கோடி செலவில் 50 கணினி அறைகள், 3.52 கோடி செலவில் 88 பள்ளிகளில் பெருமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படி, நடுநிலைப்பள்ளிகளை உயர் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் அரியலூர் மாவட்டத்தில் 4 பள்ளிகள், கடலூரில் 6, தர்மபுரி 3, திண்டுக்கல் 7, ஈரோடு 6, காஞ்சிபுரம் 3, கரூர் 2, கிருஷ்ணகிரி 8, மதுரை 4, நாகை 3, பெரம்பலூர் 2, புதுக்கோட்டை 8, சேலம் 3, திருவண்ணாமலை 6, தேனி 2, திருநெல்வேலி 4, திருப்பூர் 5, திருவள்ளூர் 8, திருவாரூர் 3, திருச்சி, வேலூர் தலா 4, விருதுநகர் 5, விழுப்புரம் 2 பள்ளிகளில் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படுகிறது. அதே போன்று உயர்நிலை பள்ளியில் இருந்து மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட 73 பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்துவது, 88 பள்ளிகளில் வகுப்பறைகளை மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.  

மேலும், கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா (6 முதல் 12ம் வகுப்பு) 4 பள்ளிகளில் தலா 50 மாணவர்கள் அமரும் வகையில் 3.43 கோடி செலவில் கட்டிடங்கள், கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலாயா பள்ளிகளில் ( 6 முதல் 10ம் வகுப்பு) 3 பள்ளிகளில் தலா 50 மாணவர்கள் அமரும் வகையில் 2.74 கோடி செலவில் கட்டிடங்கள் கட்டவும், 1.97 ேகாடி செலவில் திருநெல்வேலி பெரம்பலூரில் 2 உண்டி உறைவிட பள்ளிகளுக்கான கட்டிடங்கள் கட்டப்படுகிறது. இப்பணிகளை பொதுப்பணித்துறையின் மூலம் மேற்கொள்ள அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து, பொதுப்பணித்துறை சார்பில் இப்பணிகளுக்கு டெண்டர் விட்டு வரும் நிலையில் இந்தாண்டுக்குள் பணிகளை முழுவதுமாக முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: