புதிய நூலகக்கட்டிடப்பணி தரமற்ற செங்கற்களால் நடக்குது கட்டுமானம்: தரமற்ற செங்கற்களால் நடக்குது கட்டுமானம்: பொதுமக்கள் அதிர்ச்சி

மதுரை: புதிய நூலகக் கட்டிடத்திற்காக தரமற்ற செங்கற்களால் கட்டுமானம் நடைபெறுவதை பார்த்த வண்டியூர் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மதுரை வண்டியூர் பகுதிக்கு நூலகம் தேவை என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து நூலகம் வைக்க மாவட்ட நூலகம் முன்னுக்கு வந்தது. மாநகராட்சி வார்டு அலுவலகம் அருகே மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இருந்தது. மோசமடைந்த காரணத்தால் அதனை இடித்து அப்புறப்படுத்தினர். அந்த காலி இடத்தில் நூலகக்கட்டுமானப்பணி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு துவங்கியது. கொரோனா வைரஸ் பரவுதலை தடுப்பதற்காக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

தற்போது ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து நூலகக்கட்டுமானப்பணி மீண்டும் துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் கட்டுமானத்திற்கு தேவையான செங்கற்கள் இறக்கி வைக்கப்பட்டுள்ளன. அந்த செங்கற்கள் தீயால் சரிவர சுடாதவைகளாக இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சிலர் கூறும்போது, ‘சுடாத செங்கற்கள் மீது தண்ணீர் தெளித்தால் களிமண்ணாக மாறி விடும் வாய்ப்பு உள்ளது. கட்டிடம் எழும்பிய சில நாட்களிலேயே சரிந்து விழும் ஆபத்து உள்ளது. நூலகத்திற்குள் மாணவர்கள், பொதுமக்கள் அமர்ந்து படிப்பார்கள். இதனால் உயிர்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தரமான பொருட்களை கொண்டு கட்டிடத்தை எழுப்ப வேண்டும்’ என்றனர்.

Related Stories: