புதுச்சேரி: புதுச்சேரியில் மாரடைப்பால் உயிரிழந்தவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அவரது உடல் சவக்குழியில் வீசப்பட்டுள்ளது. சென்னை ஆயிரவிளக்கு பகுதியை சேர்ந்தவர் ஜோதிமுத்து, வயது ( 45), இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி கொரோனா ஊரடங்கு உத்தரவிற்கு முன்பே தனது மகளுடன் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அடுத்த சில தினங்களில் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் தன்னை தானே தனிமைபடுத்தி கொண்டனர். இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு தளர்வு அளிக்கப்பட்டதால் சென்னையில் இருந்த ஜோதிமுத்து மனைவி மற்றும் மகளை சந்திப்பதற்காக நேற்று முன்தினம் தனியார் டாக்சி மூலமாக புதுச்சேரி மாநிலத்திற்கு சென்றுள்ளார். அச்சமயம் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை மீட்ட உறவினர்கள் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜோதிமுத்து வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து, ஜோதிமுத்து உடல் பிரேத பரிசோதனைக்காக கதுகாம்பம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.