ரேசன் கார்டுக்கு ரூ. 50,000 கடன் தரப்படும் என்ற அறிவிப்பு உண்மையா ? கூட்டுறவு வங்கி அதிகாரிகளுக்கே தெரியவில்லையே : டிடிவி தினகரன் சாடல்

சென்னை : குடும்ப அட்டைதாரர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.50,000 கடன் தரப்படும் என்ற அறிவிப்பு உண்மையா என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த அறிவிப்பிற்கான நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறதா எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், அமைச்சர் கூறிய கடன் திட்டம் பற்றி வங்கி அதிகாரிகளுக்கே தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,குடும்ப அட்டை வைத்திருக்கும் சிறு வணிகர்களுக்கு ரூ.50,000/- கடன் வழங்கப்படும் என்ற கூட்டுறவுத்துறை அமைச்சரின் அறிவிப்பை நம்பி கூட்டுறவு வங்கிகளுக்குச் செல்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுவதாக செய்திகள் வருகின்றன.

அப்படியொரு கடன் திட்டம் பற்றி தங்களின் கவனத்திற்கே வரவில்லை என்று கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கூறுவதாக தகவல்கள் வருகின்றன. கொரோனா துயரால் ஏற்கனவே அல்லல்படும் மக்களை இப்படி அலைக்கழிப்பது வேதனைக்குரியது.

அமைச்சரின் அறிவிப்பு உண்மையா? அதற்கான நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறதா? அப்படி ஒதுக்கப்பட்டிருந்தால் அந்த கடனைப்  பெறுவதற்கான வழிமுறைககள் என்ன ? - என்பனவற்றை எல்லாம்  தெளிவாகவும், வெளிப்படையாகவும் தமிழக அரசு மக்களுக்கு விளக்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: