சென்னை: கட்டுப்பாடு பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கு 10ம் வகுப்பு தேர்வுக்கான ஹால் டிக்கெட் வீடுகளுக்கு சென்று வழங்கப்படும் என்று சென்னை கலெக்டர் தெரிவித்துள்ளார். சென்னை கலெக்டர் சீத்தாலட்சுமி வெளியிட்ட அறிக்கை:10ம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரையிலும், மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வு வரும் 16ம் தேதியும், மார்ச் 24ம் தேதி நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வை எழுதாத தேர்வர்களுக்கு மட்டும் வருகிற 18ம் தேதியும் தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வுகளை எழுதவுள்ள அனைத்து தனித் தேர்வர்களும் (தட்கல் உட்பட) 4ம் தேதி (நேற்று) பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று ஹால் டிக்கெட் என்ற வாசகத்தினை கிளிக் செய்து தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து, தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.