சென்னை: சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள ரிப்பன் மாளிகையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கொரோனா நோய் தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.பின்னர் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: கண்ணுக்கு தெரியாத வைரஸ் என்பதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதையும், கை கழுவுதலையும் தொடர்ச்சியாக கடைபிடிக்க வேண்டும். தண்டையார்பேட்டை, ராயபுரம் பகுதிகளில் தற்போதைய சூழலை மக்கள் உணராமல் நாங்கள் கூறும் அறிவுரைகளை உள்வாங்க மறுப்பதே சவாலான விஷயமாக உள்ளது. முகக் கவசம் அணியாமல் அலட்சியமாக செயல்படுபவர்கள் மீது காவல் துறை உதவியுடன் வழக்கு பதியப்படும். தனிமைப்படுத்தப்படுவார்கள். பொதுமக்கள் தங்களுடன் பயணிப்பவர்கள் முகக்கவசம் அணியவில்லை என்றால் அதை தட்டிக் கேட்க வேண்டும்.