ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே, குன்னூர் வைகை ஆற்றில் உள்ள உறைகிணறுகளில் நீர்மட்டம் குறைந்து வருவதால், கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆண்டிபட்டி அருகே உள்ள குன்னூர் வைகை ஆற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட உறைகிணறுகள் உள்ளன. இந்த கிணறுகள் மூலம் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில மாதமாக போதிய மழை இல்லாததால், தற்போது ஆற்றில் நீர்வரத்து குறைந்து, உறைகிணறுகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. வைகை ஆறு வறண்டு கிடக்கும் நிலையில், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 125 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீரையும் கரையோர விவசாயிகள் மின்மோட்டார் மூலம் உறிஞ்சி சட்டவிரோதமாக விவசாயத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர்.