கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த செவிலியர் பிரிசில்லா குடும்பத்துக்கு ₹5 லட்சம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா குடும்பத்திற்கு ₹5 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்புடைய பணியில் ஈடுபட்டிருந்த செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா கடந்த 27ம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

பணியின் போது உயிரிழந்த செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லாவை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்புடைய பணிகளில், தன்னலம் கருதாமல், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய ஜோன் மேரி பிரிசில்லா சேவையினை அங்கீகரிக்கும் விதமாக சிறப்பினமாக, அவருடைய குடும்பத்திற்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ₹5 லட்சம் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: