சென்னை: தி.நகர் ரங்கநாதன் தெருவில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செயல்பட்ட 150க்கும் மேற்பட்ட கடைகளை மூட வேண்டும், என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், 4ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தியபோது, தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் வணிக வளாகங்கள், தியேட்டர்கள், பெரிய கடைகள் உள்ளிட்ட கடைகளை தவிர்த்து தனிக் கடைகள் அனைத்தும் திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அப்படி திறக்கும்போது அனைத்து கடைகளிலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், தொழிலாளர்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும், அடிக்கடி கைகழுவ வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.