சென்னை: மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜெஇஇ., நீட் ஆகிய தேர்வுகளை எழுத இந்த ஆண்டு 65 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். தற்போதுள்ள சூழ்நிலையில் நாடு முழுவதும் மேற்கண்ட நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க மத்திய மனித வள மேம்பாட்டு துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, உயர்தர மாதிரித் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தேசிய தேர்வுக்கான பயிற்சி(அபியாஸ்) என்ற செயலியை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியை செல்போன், கம்ப்யூட்டர் ஆகியவற்றில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.