வீடு, வாகனம் உள்ளிட்ட வங்கி கடன்களுக்கான இஎம்ஐ-யை செலுத்துவதற்கு மேலும் 3 மாதங்களுக்கு தளர்வு : ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு

மும்பை : வீடு, வாகனம் உள்ளிட்ட கடன்களுக்கான இஎம்ஐயை செலுத்துவதற்கு மேலும் 3 மாதங்கள் தளர்வு அளிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். கொரோனாவால் வீழ்ந்த இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ. 20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து, 5 கட்டமாக பொருளாதார திட்டங்கள் மற்றும் சீரமைப்பு தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டார்.பல முக்கிய பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் பங்களிப்பு அளிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். நிதியமைச்சரின் அறிவிப்புகளுக்கு அடுத்து முதன் முறையாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.இதற்கு முன்னர் 2 முறை செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ரெப்போ விகிதம் மேலும் 40 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்படுகிறது. 4.4 சதவீதமாக இருந்த ரெப்போ விகிதம் 4 சதவீதமாக குறைக்கப்படுகிறது. ரெப்போ விகிதம் குறைப்பால், வீடு, வாகனம் உள்ளிட்ட வங்கி கடன்கள் மீதான வட்டி குறைய வாய்ப்பு உள்ளது.

மேலும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்தா தாஸ் கூறியதாவது,

*4.4 சதவீதமாக இருந்த ரெப்போ விகிதம் 4 சதவீதமாக குறைக்கப்படுகிறது. ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

*கொரோனா தொற்று காரணமாக மத்திய அரசின் வரி வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

*உலகப் பொருளாதாரம் மந்த நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.உலகம் முழுவதும் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.2020 முதல் காலாண்டில் சர்வதேச வர்த்தகம் கணிசமாக சரிந்துள்ளது.

*உலகப்பொருளாதாரம் 13% முதல் 32% வரையிலான அளவிற்கு சுருங்கக்கூடும்.

*11 ஆண்டுகளில் இல்லாத அளவு தொழில்துறை உற்பத்தி குறைந்துள்ளது. வளர்ந்த நாடுகளில் உள்நாட்டு உற்பத்தி 14% வரை குறைந்துள்ளது.

*வளரும் நாடுகளில் வளர்ச்சி விகிதம் 2.9% ல் இருந்து மைனஸ் 6.8% ஆக உள்ளது

*மூலதனப் பொருட்களின் இறக்குமதி மார்ச் மாதம் 27%குறைந்துள்ளது.

*இந்தியாவின் 60 சதவீத உற்பத்தி துறை கொரோனா சிவப்பு அல்லது ஆரஞ்ச் மண்டலத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் தொழிற்துறை உற்பத்தி மார்ச் மாதம் 17% குறைந்துள்ளது.

*மூலதன பொருட்கள் தேவை ஏப்ரல் மாதத்தில் 57 சதவீதம் பற்றாக்குறை, உற்பத்தி துறை 21 சதவீதம் வீழ்ச்சி

*ஏப்ரல் மாதத்தில் உணவுப் பொருள் பணவீக்க விகிதம் 8.6% ஆக அதிகரிப்பு

*ஏப்ரல் மாதத்தில் இறக்குமதி 58% குறைந்துள்ளது.கோவிட் பிரச்சனை முடிந்த பின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.

*உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை உயரலாம் என ரிசர்வ் வங்கி அச்சம்.

*ஜிடிபி சிறிதளவு கூட வளர்ச்சி ஏற்படும் சூழல், இந்த நிதியாண்டில் இல்லை. ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை மேம்படுத்தவும், மாநிலங்களுக்கான நிதிப்பிரச்னைகளை சரிசெய்யவும் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும்.

*இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 9.2 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டை விட இந்தாண்டு விவசாய  உற்பத்தி 44% வளர்ச்சி அடையும் என எதிர்பார்ப்பு.

* நுகர்வோர் விலை குறியீடு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வீழ்ச்சியடைந்துள்ளது.

*ரிசர்வ் வங்கி பணிகள் தொய்வடையாமல் இருக்க 200 அதிகாரிகள் பணியாற்றினர்.

*வீடு, வாகனம் உள்ளிட்ட கடன்களுக்கான இஎம்ஐயை செலுத்துவதற்கு மேலும் 3 மாதங்கள் அளிக்கப்பட உள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

Related Stories: