கொரோனா வைரஸ் நெருக்கடி சுமார் 6 கோடி மக்களை தீவிர வறுமையில் தள்ளும் : உலக வங்கி

வாஷிங்டன் : கொரோனா வைரஸ் நெருக்கடி சுமார் 6 கோடி மக்களை தீவிர வறுமையில் தள்ளும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. உலகெங்கிலும் கிட்டத்தட்ட 50 லட்சத்திற்கும்  அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 300,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இதனால் தொடர் ஊரடங்கால உலக நாடுகள் பொருளாதார சிக்கலில் சிக்கி தவிக்கின்றனர். இந்நிலையில்,கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக உலக அளவில் சுமார் 6 கோடி மக்கள் கடுமையான வறுமைக்கு தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்து உலக வங்கி தலைவர் டேவிட் மால்பாஸ் மேலும் கூறுகையில் ,உலக வங்கி மூலம் தற்போது, 100 நாடுகளில் உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் கோடிக்கணக்கானவர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்; பட்டினிச் சாவுகள் தவிர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் உண்டாக்கியுள்ள உலகளாவிய பொருளாதார நெருக்கடியால், நாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக வறுமை ஒழிப்பில் பெறப்பட்ட நற்பலன்கள் அனைத்தையும் இழந்து விட்டோம். கொரோனாவால் உலகெங்கும் சுமார் ஆறு கோடி மக்கள், தீவிர வறுமை நிலைக்குத் தள்ளப்படுவர்.இதனால், அதிக வறுமை நிலைக்குத் தள்ளப்படும் நாடுகளில் அடுத்த, 15 மாதங்களுக்கு, 16,000 கோடி அமெரிக்க டாலர்கள் (160 பில்லியன்) செலவிடத் திட்டமிட்டுள்ளோம். அரசுகளும் அமைப்புகளும் பகைமையை மறந்து, வறுமை ஒழிப்பில் தீவிரமாக செயல்பட வேண்டிய காலம் இது, என்றார்.

Related Stories: