ஈரோட்டில் அதிர்ச்சியான சம்பவம்: செல்போனில் பப்ஜி விளையாடிய சிறுவன் பலி: மாரடைப்பில் உயிரிழந்தான்

ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த குமார் மகன் சதீஸ்குமார் (16). நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர், செல்போனில் பப்ஜி கேமை ஆன்லைனில் நண்பர்களுடன் குழுவாக விளையாடுவது வழக்கம். நேற்று முன்தினம் மதியம் வீட்டிற்கு அருகில் உள்ள மாட்டுச்சந்தை திடலில் அமர்ந்து அவர் பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் சதீஸ்குமாரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, சதீஸ்குமார் மாரடைப்பு காரணமாக வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக  கூறினர்.

இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் புளூவேல் விளையாட்டால் ஏராளமானோர் இறந்துள்ளனர். அதனால், அந்த கேம் உலகம் முழுவதும் தடை செய்யப்பட்டது. தற்போது செல்போனில் பப்ஜி கேம், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடப்பட்டு வருகிறது. இந்த கேமில் நண்பர்கள் மற்றும் முகம் தெரியாதவர்களை கூட நண்பர்களாகி ஆன்லைன் மூலம் விளையாடலாம் என்பதால் பப்ஜி கேமில் பெரும்பாலானோர் மூழ்கி உள்ளனர். இந்தநிலையில் தமிழகத்தில் முதன்முறையாக பப்ஜி கேம் விளையாடிய ஈரோடு சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: