விழுப்புரம்: ஊரடங்கு உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்ட விக்கிரவாண்டி- கும்பகோணம் நான்குவழிச்சாலை திட்டப்பணிகள் மீண்டும் தொடங்கி செயல்பட்டு வருகிறது. விக்கிரவாண்டியிலிருந்து கும்பகோணம் வழியாக தஞ்சாவூர் செல்லும் சாலை, இருவழிச்சாலையாக இருந்ததை, நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு ரூ.711 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்தது. இதன் தொடர்ச்சியாக விக்கிரவாண்டியிலிருந்து, சேத்தியாத்தோப்பு, பின்னலூர் வரை 66 (65.96) கிலோ மீட்டர் தூரத்திற்கு, கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மும்பையை சேர்ந்த ரிலையன்ஸ் இன்பிரா ஸ்டெக்சர் லிட் நிறுவனம் காண்டிராக்ட் எடுத்து, இரண்டாண்டுகளில் நான்கு வழிச்சாலை பணியை செய்து முடிக்க திட்டமிட்டு பணிகளை தொடங்கியது. கும்பகோணம்- தஞ்சாவூர் சாலையில் ஆறுகள், சிறுநதிகள், தண்ணீர் பாசன வாய்கால்கள் செல்ல 90 குறும்பாலங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள பொதுமக்கள் வாகனங்கள் பைபாஸ் சாலையை பாதுகாப்பாக கடக்க 25 தரைப்பாலங்கள், தென்பெண்ணையாறு, கெடிலம் ஆற்றின் குறுக்கே 2 பாலங்களும், கோலியனூர் கூட்ரோடு, பண்ருட்டி பைபாஸ், வடலூர் பைபாஸ் ஆகிய இடங்களில் 3 ரயில்வே மேம்பாலமும், வடலூர் மருவாய் கிராமம் அருகே பைபாஸில் மேம்பாலம் ஒன்றும் அமைக்கும் பணி நடந்து வந்தன.