தெற்கு வங்கக்கடலில் மையம் கொண்ட ஆம்பன் புயல் உச்ச உயர் தீவிர புயலாக மாறியது: நாளை மறுநாள் கரையைக் கடக்கும் என கணிப்பு...!

சென்னை: வங்கக் கடலில் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் மாலை புயலாக(ஆம்பன்) வலுப்பெற்று மேற்கு திசையில் நகர்ந்து வந்தது. நேற்று நள்ளிரவு அது அதி தீவிரப் புயலாக மாறியது. தற்போது உச்ச உயர் தீவிர புயலாக உருமாறி, வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னைக்கு கிழக்கே ஏறக்குறைய 650 கிமீ தொலைவில் மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடலில் புயல் மையம் கொண்டுள்ளது.

இதனால், தெற்கு வங்க கடல் பகுதியில் காற்று அவ்வப்போது மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி வருகிறது. வங்க கடலின் மத்திய பகுதியில் மிக பலமான சூறாவளி காற்று வீசக்கூடும். மணிக்கு 170-180 கிமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மத்திய வங்கக் கடல் மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

ஆம்பன் புயல் காரணமாக தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் நாமக்கல், கரூர், திருச்சி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும் ஆம்பன் புயல், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே வரும் 20ம் தேதி நாளை மறுநாள் பிற்பகலிலோ அல்லது மாலையிலோ கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சென்னையில் சீற்றம்:

ஆம்பன் புயல் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகின்றன. பட்டினப்பாக்கம், மெரினா, பெசன்ட் நகர் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

Related Stories: