சென்னை: ஊரடங்குக்கு முன்னதாக கோயம்பேட்டில் நிறுத்தப்பட்டு சென்ற இரு, நான்கு சக்கர வாகனங்களை எடுக்கும்போது, ஒருநாள் வாடகை மட்டும் செலுத்தினால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் அரசு ஊரடங்கு உத்தரவு அறிவித்ததையொட்டி கோயம்பேடு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் சென்ற பொதுமக்கள் தங்கள் வாகனங்களை பேருந்து நிலையம் வாகன நிறுத்துமிடத்தில் விட்டு சென்றுள்ளனர். சுமார் 145 நான்கு சக்கர வாகனங்களும், 1,359 இரு சக்கர வாகனங்களும் விட்டுச் செல்லப்பட்டுள்ளது. தற்போது வாகனங்களை திரும்ப எடுக்க செல்லும் பொதுமக்களிடம் இந்த வாகனங்களுக்கு 55 நாட்களுக்கும் முழுநேர வாடகை கட்டணம் வசூலிப்பதாக கவனத்திற்கு வந்தது.