தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவிடும் நிலையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஏற்ப பேரிடர் மேலாண்மை திட்டங்களை மாற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளது. வருகிற 1-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும், இது தொடர்பான அறிகுறிகள் அந்தமான், நிக்கோபார் தீவுகளில் தென்படுவதாகவும் கூறியிருந்தது. வானிலை மையம் தெரிவித்தபடி அந்தமான் பகுதிகளில் மழைக்கான அறிகுறிகள் தென்பட்டன.

இந்த நிலையில் கேரளாவில் வருகிற 5-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த ஆண்டு இயல்பான மழையே பெய்யும் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது. கேரளாவில் ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாதம் வரை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தற்போது இது ஒடிசாவில் பாரதீப் பகுதியில் இருந்து சுமார் 1100 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதுமேலும் வலுப்பெற்று இன்று மாலை புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து தென் மேற்கு பருவ மழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் மாவட்ட வாரியாக பேரிடர் மேலாண்மை திட்டம் அமைக்கவும், மீட்புக் குழுவினர் மற்றும் தன்னார்வலர்களுக்கு பாதுகாப்பு உடைகளை தயார் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீட்பு பணியின் போது சமூக இடைவெளியை உறுதி செய்யவும், சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு நிவாரண முகாம்களை அதிகரிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. நிவாரண முகாம்களை தொடர்ந்து கிருமி நாசினியால் சுத்தப்படுத்துமாறும் கூறப்பட்டுள்ளது. புயல் தாக்க வாய்ப்புள்ள இடங்களில் உள்ள தனிமை மையங்கள் மற்றும் நிவாரண முகாம்களை வேறு இடங்களுக்கு மாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: