தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இன்று மீண்டும் திறப்பு: இனி டோக்கன் மூலம் மது விநியோகம்: 7 நாட்களுக்கு 7 வண்ணங்களில் டோக்கன்

சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறக்கப்படுகிறது.  ஒவ்வொரு நாட்களுக்கு ஒவ்வொரு வண்ண டோக்கன்கள் என்கிற அடிப்படையில் 7 நாட்களுக்கு  7 வண்ணங்கள் அடங்கிய டோக்கன்கள் மூலம் நாள்தோறும் மதுவிற்பனை நடைபெற உள்ளது.

 ஊரடங்கை தளர்த்தி அறிவித்தபோது, வருவாய் பற்றாக்குறையை காரணம் காட்டி டாஸ்மாக் கடைகளை கடந்த 7ம் தேதி தமிழக அரசு திறப்பதாக அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தின. இந்த நிலையில்  கடந்த 7ம் தேதி சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதி, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியை தவிர்த்து மாநிலம் முழுவதும்  பல்வேறு கட்டுபாடுகளில் 5,300 கடைகளில் 3,700 கடைகள் திறக்கப்பட்டன.

ஆனால், டாஸ்மாக் கடைகளில் எந்தவித கட்டுப்பாடும் முறையாக கடைபிடிக்கவில்லை. சமூக இடைவெளியும் பின்பற்றப்படவில்லை. இதனால் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்கும் சூழல் உருவானது. இதைதொடர்ந்து, ஊரடங்கு விதிகளை மீறி கூட்டம் கூட்டமாக குவிந்ததாக கூறி டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் கடந்த 8ம் தேதி உத்தரவிட்டது. இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன. டாஸ்மாக் கடைகளை திறந்தபோது முதல்நாளில்  ரூ.172.59 கோடி, இரண்டாவது நாளில் ரூ.122 கோடி என மொத்தம் 2 நாட்களில் ரூ.295 கோடி, மது விற்பனை மூலம் அரசுக்கு வருவாய் கிடைத்தது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால்  தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு  ஏற்பட்டது.

இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.  மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடையில்லை எனக்கூறி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த

நிலையில், இன்று மீண்டும் டாஸ்மாக்கடைகள் திறக்கப்படுகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் கடைகள் செயல்படுகிறது.  இதுகுறித்து தமிழ்நாடு மாநில வாணிப கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: உச்சநீதிமன்ற ஆணையை தொடர்ந்து மதுபான கடைகள் நாளை (இன்று) முதல் திறக்கப்படும். பெருநகர சென்னை காவல்துறை எல்லை மற்றும் திருவள்ளூர் மாவட்ட  எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்படாது.

மேலும், மால்கள், வணிக வளாகங்கள் மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளிலும் இக்கடைகள் இயங்காது. மதுபான கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படும். நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். கடைக்கு வரும் அனைவரும் முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 7 மற்றும் 8ம் தேதிகளில் டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. எனவே, உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து இன்று முதல் கடைகளில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மதுவிநியோகம் செய்யப்படுகிறது.

ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஏற்றார்போல் இந்த டோக்கன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஞாயிறு முதல் திங்கள் வரை வாரத்தின் 7 நாட்களில் கிழமை வாரியாக வண்ண டோக்கன்கள் வழங்கப்படவுள்ளன. சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் உள்ளிட்ட 7 வண்ணங்களில் மது வாங்க டோக்கன் வழங்கப்படும். குறிப்பிட்ட வண்ண டோக்கன் உள்ளவர்கள் கடைக்கு வந்து மது வாங்கிக் கொள்ளலாம். டோக்கனில் கடை எண் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த நேரங்களில் தான் வந்து மது வாங்க வேண்டும். மற்ற நேரங்களில் வந்தால் மது வழங்கப்படாது என்று டாஸ்மாக் நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எந்தெந்த நாட்களில் எந்த வண்ணம்?

ஞாயிறு    ஆரஞ்சு

திங்கள்    பச்சை

செவ்வாய்    சிவப்பு

புதன்    நீலம்

வியாழன்    கத்தரிப்பூ

வெள்ளி    அடர் காவி  

சனி    கருப்பு

Related Stories: