சமூக இடைவெளியுடன் ஒரு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே எழுதும் வகையில் ஏற்பாடு; அவரவர் பள்ளியிலேயே 10ம் வகுப்பு பொதுத் தேர்வு: பள்ளிக்கல்வித்துறை

சென்னை: 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை ஒரு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே எழுதும் வகையில் பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை மாணவர்கள் அவரவர் பள்ளியிலேயே எழுதவும் பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. கொரோனா தொற்றை தடுக்க சமூக இடைவெளியுடன் தேர்வை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றனர்.

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை காரணமாக கடந்த மார்ச் 27ம் தேதி நடத்தப்படவிருந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டது. அதேபோல் மார்ச்  26ம் தேதி நடக்கவிருந்த, பிளஸ் 1 பாடங்களுக்கான தேர்வுகளில் சில, தள்ளி வைக்கப்பட்டன. தமிழகத்தில், மார்ச், 24ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அன்று முற்பகலில் நடந்த, பிளஸ் 2 வேதியியல் உள்ளிட்ட சில பாடங்களுக்கான தேர்வுகளில், 37 ஆயிரம் மாணவர்கள் வரை பங்கேற்க முடியவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த மே 11ம் தேதி பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், ஜூன், 1ம் தேதி முதல் 10ம் வகுப்பு தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும்  மார்ச் 26ம் தேதி நடத்தப்படாமல் தள்ளி வைக்கப்பட்ட  பிளஸ் 1 தேர்வு,  ஜூன், 2ம்  நடத்தப்படும் என்றும்  மார்ச், 24ம் தேதி நடந்து முடிந்த 12ம் வகுப்பு தேர்வில் பங்கேற்காத 37,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, ஜூன், 4ம் தேதி தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை மாணவர்கள் அவரவர் பள்ளியிலேயே எழுதவும் பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: