வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக நாளை மறுநாள் சூறாவளி புயலாக வலுப்பெறும்; வானிலை ஆய்வு மையம்

சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக நாளை மறுநாள் சூறாவளி புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வெப்ப சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாகப்பட்டினம் தஞ்சாவூர் திருவாரூர் புதுக்கோட்டை சிவகங்கை இராமநாதபுரம், தூத்துக்குடி திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர் மாவட்டம் மடுக்குர் மற்றும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி யில் 5 சென்டி மீட்டர் மழையும், ஈரோடு மாவட்டம் தாளவாடியில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியசும் குறைந்தபட்சமாக 28 டிகிரி  பதிவாகும். தெற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதியில் வரும் 15ஆம் தேதி சூறாவளி காற்று மணிக்கு 45 - 65 கிலோ மீட்டர் வேகத்திலும் ,16-ஆம் தேதி சூறாவளி காற்று மணிக்கு 55 - 75 கிலோ மீட்டர் வேகத்திலும், 17-ஆம் தெறி சூறாவளி காற்று மணிக்கு 65 - 85 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால், இந்த குறிப்பிட்ட மூன்று நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: