காங்கயம்: கொரோனா ஊரடங்கு காரணமாக காங்கயத்தில் தேங்காய் எண்ணெய் வியாபாரத்தில் ரூ.250 கோடி அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கயம், வெள்ளகோவில், முத்தூர், மூலனூர் சென்னிமலை சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது 500க்கும் மேற்பட்ட தேங்காய் உலர்களங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு தேங்காய் பருப்பு உலர்த்தப்பட்டு (கொப்பரை) காங்கயத்தில் உள்ள 80க்கும் மேற்பட்ட ஆலைகள் மூலம் எண்ணெயாக பிழிந்து எடுக்கப்படுகிறது. பிறகு தேங்காய் எண்ணெய் கேரளா உள்பட பல்வேறு வட மாநிலங்களுக்கு தினமும் 20 டேங்கர் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இதனால் தினமும் ரூ.4 முதல் 6 கோடி அளவில் வியாபாரம் நடைபெற்றது.
இந்நிலையில், கடந்த 48 நாட்களாக ஊரடங்கு உள்ளதால் காங்கயத்தில் இருந்து அனுப்பப்படும் தேங்காய் எண்ணெய் நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு சில நிறுவனம் மட்டும் குறைந்த அளவில் எண்ணெய் உற்பத்தி செய்து தினமும் சுமார் 5 டேங்கர் லாரி மட்டும் அனுப்பி வருகின்றனர். இதனால் காங்கயம் சுற்றுவட்டாரத்தில் தேங்காய் பருப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.