விசாகப்பட்டினம் விஷவாயு கசிவால் பாதிப்பு: 5 கிராமத்தில் விளையும் காய்கறி, பழங்களை சாப்பிட வேண்டாம்: மத்திய குழுவினர் எச்சரிக்கை

திருமலை: விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு எதிரொலியாக 5 கிராமங்களில் விளையும் காய்கறி, பழம் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம், ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தில் உள்ள எல்.ஜி பாலிமர் நிறுவனத்தில் ஊரடங்கிற்கு பிறகு கடந்த 7ம் தேதி தொழிற்சாலையை மீண்டும் தொடங்குவதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அப்போது, ஸ்டைரின் என்ற விஷவாயு கசிந்து 12 பேர் பரிதாபமாக இறந்தனர். 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இது தவிர வெங்கடாபுரம் உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள 5 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மத்திய அரசு, நிபுணர் குழுவை அனுப்பி அந்த கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் விஷ வாயுவால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் இருந்து மண், தண்ணீர், மரக்கிளைகள், இலைகள், விதைகள் உள்ளிட்டவற்றை பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இந்நிலையில் நிபுணர் குழுவினர், ஓராண்டுக்கு அந்த பகுதியில் உள்ளவர்களை மருத்துவ கண்காணிப்பில் வைக்க வேண்டும். 5 கிராமங்களில் விளையக்கூடிய காய்கறி, பழங்கள், பால் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம்.  அந்த பகுதியில் விளையும் தீவனங்களையும்  கால்நடைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.  

இதற்கிடையே நேற்று முன்தினம் மாலை பாதிக்கப்பட்ட கிராமத்தில் பொதுமக்கள் மீண்டும் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு தைரியத்தை ஏற்படுத்தும் விதமாக மாநில அமைச்சர்கள் கண்ணபாபு, போச்சா  சத்தியநாராயணா,  அவந்தி சீனிவாஸ், தர்மானபிரசாத், எம்பி விஜய்சாய் ஆகியோர் இரவு பொதுமக்களுடன் இணைந்து உணவு சாப்பிட்டு படுத்து உறங்கினர்.

தென்கொரியாவுக்கு 8000 டன் ஸ்டைரின் அனுப்பி வைப்பு

 விசாகப்பட்டினம் கலெக்டர் வினய்சந்த் நேற்று அளித்த பேட்டியில், ‘‘எல்ஜி பாலிமர் நிறுவனத்தில் 8 ஆயிரம் டன் ஸ்டைரின் ரசாயனம் மிச்சம் இருந்தது. அவை எக்காரணத்தை கொண்டும் விசாகப்பட்டினத்தில் இருக்கக்கூடாது என்று முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த 8 ஆயிரம் டன் ஸ்டைரினும் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சிறப்பு கப்பல் மூலம் நேற்று இரவு தென்கொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், மற்ற இரு இடங்களில் உள்ள 3,500 மற்றும் 1500 டன் ஸ்டைரினை விரைவில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

Related Stories: