உடுமலை: மடத்துக்குளம் அருகே பால் வேனில் கடத்தப்பட்ட 2 டன் இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. அத்துமீறி வாகனங்கள் செல்வதை போலீசார் கண்காணித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இரவு 11 மணிக்கு பழனியில் இருந்து பால் வேன் ஒன்று, சோதனைச்சாவடி அருகே வந்தது. அப்போது, எஸ்.ஐ. பொருட்செல்வன், ஏட்டு ராஜேந்திரன் ஆகியோர் வேனை சோதனை செய்தனர். அப்போது பால் வேனில் 2 டன் அளவுக்கு இறைச்சிகள் இருந்தது தெரியவந்தது. ரூ.3 லட்சம் மதிப்புள்ள இந்த இறைச்சிகளை கோவைக்கு கடத்தி சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, வேன் ஓட்டுநர் அகஸ்தீஸ்வரன் (45) மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.