கொரோனாவை ஒழிக்க மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: பாஜ தலைவர் முருகன் வேண்டுகோள்

சென்னை: கொரோனாவை ஒழிக்க மத்திய, மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பாஜ தலைவர் முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசுடன் இணைந்து தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனையும் தாண்டி கொரோனா பரவல் என்பது ,பல காரணங்களால் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிய தொற்றுகள் எதுவும் ஏற்படாமல் தடுத்து விட்டால் ஊரடங்கு முடியும் போது, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விடும்.

எனவே அனைவரும் ஊரடங்கை மதித்து, வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்; தேவையின்றி வெளியில் வரக்கூடாது. கொரோனாவை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சமூகப் பொறுப்பின்றி, ஊரடங்கை மீறி மக்கள் வெளியே வந்தால் அது கொரோனா ஒழிப்பு என்ற நமது லட்சியத்தை பாழாக்கி விடும். தமிழக மக்கள் இதுவரை வழங்கிய ஒத்துழைப்பை காட்டிலும் வரும் காலங்களில் கூடுதல் ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். மக்கள் இந்த விஷயத்தில் கவனத்துடன் செயல்பட்டால் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலுடன் நாம் கொரோனாவை இந்திய தேசத்தை விட்டே விரட்ட முடியும்.

Related Stories: