மாஸ்க், சானிடைசர்களுக்கு ஜிஎஸ்டி ரத்து செய்யக்கோரி வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

சென்னை: கொரோனா தொற்று பரவாமலிருக்க பயன்படுத்தப்படும் முகக்கவசம் (மாஸ்க்) மற்றும் சானிடைசர் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டியை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் சூளைமேட்டை சேர்ந்த வக்கீல் எஸ்.ஸ்டாலின் ராஜா தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை சுமார் 700 பேரை பலி வாங்கியுள்ளது. தமிழகத்தில் 22 பேர் பலியாகியுள்ளனர். மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணியவேண்டும் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

 பொதுமக்களுக்கு முகக் கவசங்களும், கைகளைக் கழுவும் சானிடைசர்களும் இப்போது அத்தியாவசிய பொருளாக மாறியுள்ளது. ஆனால், முகக் கவசங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டியும், சானிடைசர்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்பட்டு வருகிறது.  கொரோனா என்ற கடுமையான தொற்றிலிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள மக்கள் கடுமையாக போராடிவரும் நிலை இன்னும் சில மாதங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த அத்தியாவசிய பொருட்களான முகக் கவசம் மற்றும் சானிடைசர்களுக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக்கோரி மத்திய நிதித்துறைக்கு மனு அனுப்பினேன்.

எந்த பதிலும் இல்ைல. எனவே, கொரோனா பரவல் முழுவதுமாக தடுக்கப்படும்வரை முக கவசம் மற்றும் சானிடைசர்களுக்கு ஜிஎஸ்டி வரி வசூலிக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories: