சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் 10 மாவட்டங்களில் 104 டிகிரி வெயில் கொளுத்தும் என்பதால் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீடித்து வரும் வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 104 டிகிரி வரை வெயில் கொளுத்துகிறது. அதிகபட்சமாக நேற்று திருச்சியில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது. தஞ்சாவூர், கரூர், மதுரை, சேலம், வேலூர் 102 டிகிரி, பாளையங்கோட்டை, தர்மபுரி 100 டிகிரி, கோவை 99 டிகிரி, சென்னை 97 டிகிரி வெயில் நிலவியது. இந்நிலையில், தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.