கடலூர்: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகளால் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பணிகளுக்கான வாகன போக்குவரத்தை தவிர மற்ற போக்குவரத்துகள் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவுக்கு முன், கடலூர் சிப்காட் வளாகத்திலுள்ள கிடங்கிற்கு டாஸ்மாக் சரக்குகளை ஏற்றி கொண்டு 44 லாரிகள் வந்தன. இந்த லாரிகளிலுள்ள சரக்குகள் இறக்கப்படாமல் அருகில் உள்ள தனியார் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகளுக்கு தற்போது விடுமுறை விடப்பட்டதால் இந்த லாரிகளிலிருந்த சரக்குகள் இறக்கப்படவில்லை. லாரியில் சரக்குகள் இறக்கப்படாத வரையில் அது லாரி ஓட்டுநர்களின் பொறுப்பு தான். சரக்குகள் திருடு போனாலும் அதற்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என அதிகாரிகள் லாரி டிரைவர்களிடம் தெரிவித்துள்ளனர்.