சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு தற்போது, ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் தங்கி பணிபுரிந்து வந்த வெளிநாட்டினர் தொடர்ச்சியாக தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பி செல்கின்றனர். இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அந்தந்த நாட்டு தூதரக அதிகாரிகள், மத்திய அரசுடன் பேசி, சிறப்பு அனுமதி பெற்று தங்கள் நாட்டு மக்களை தனி விமானங்களில் அனுப்பி வைக்கின்றனர்.கடந்த 2 வாரங்களில் சென்னையில் இருந்து மலேசியா, ஜெர்மன், அமெரிக்கா, ஓமன் நாடுகளை சேர்ந்தவர்கள் 16 சிறப்பு தனி விமானங்களில் தங்கள் நாடுகளுக்கு திரும்பினர்.