மதுராந்தகத்தில்: இந்தோனேசியாவில் இருந்து 4 ஆண்கள், 4 பெண்கள் கொண்ட குழு தமிழகம் வந்தனர். இவர்கள், பல்வேறு இடங்களுக்கு சென்ற நிலையில், கடந்த 24ம் தேதி மதுராந்தகத்துக்கு வந்தனர். கொரோனா பாதிப்பு காரணமாக இந்த எட்டு பேரும், கடந்த 20 தினங்களாக மதுராந்தகத்தில் அவர்கள் தங்கியிருந்த ஒரு வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இவர்கள், அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் அறிந்த செங்கல்பட்டு மாவட்ட வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள், அந்த 8 பேர் மீதும் இந்திய அரசின் சட்ட விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்தனர். இதை தொடர்ந்து 4 பெண்கள், 4 ஆண்கள் என 8 பேரையும் போலீசார் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.