நடப்பாண்டு ஐ.பி.எல் போட்டி நடைபெறுமா? ரத்தாகுமா?; அதிகாரிகளுடன் ஆலோசித்து இன்று அறிவிக்கிறது பிசிசிஐ...சவுரவ் கங்குலி தகவல்

மும்பை: நடப்பு ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடர் நடைபெறுமா? இல்லையா என்ற முடிவை பிசிசிஐ இன்று அறிவிக்கும் என்று தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 796 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 35 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 9,152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 308 பேர் உயிரிழந்த  நிலையில், 857 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் தனிச்சையாக ஊரடங்கை ஏப்ரல் 30 வரை நீட்டித்துள்ளனர். இதற்கிடையே, கொரோனா வைரஸ் காரணமாக ஐ.பி.எல் தொடர் ஏப்ரல் 15-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  ஐ.பி.எல் இந்தாண்டு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் இது தொடர்பான முடிவு இன்று வெளியாகும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியில், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பிசிசிஐ அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து ஐ.பி.எல் குறித்த முடிவு இன்று அறிவிக்கப்படும் என்றார். மேலும் கொரோனா வைரஸ் குறித்து பேசுகையில், இது  பயங்கரமானது. எனது 46 வருட வாழ்க்கையில், இதுபோன்ற எதையும் நான் அனுபவித்ததில்லை. அது மட்டுமல்ல, உலகம் இதுபோன்ற எதையும் பார்த்ததில்லை. இந்த நிலைமையை யாரும் மீண்டும் பார்க்க மாட்டோம் என்று நம்புகிறேன்.  அடுத்த இரண்டு வாரங்களில் எத்தனை பேர் இறக்கக்கூடும் என்று முழு உலகமும் சிந்திக்கிறது! இது நம்பமுடியாதது உள்ளது என்றார்.

Related Stories: