தாம்பரம்: தாம்பரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளதால், இந்த பகுதிகளில் நகராட்சி மூலம், ரூ.500க்கு 19 வகை மளிகை பொருட்கள் வீடு தேடி வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் வசித்த பகுதி நோய் தொற்று பரவல் ஏற்படாமல் காக்கப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டு அந்த பகுதிகள் சீல் வைக்கப்பட்டு பொதுமக்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் கடைகள் திறக்க நேற்று முதல் தடை விதித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் உத்தரவிட்டார். இதனையொட்டி அந்த பகுதிகளில் கடைகள் மூடப்பட்டுள்ளது.இந்நிலையில் கொரோனா பாதிப்பால் சீல் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் தாம்பரம் நகராட்சி சார்பில்19 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு ரூ.500க்கு வீடு வீடாக நகராட்சி ஊழியர்கள் மூலம் விநியோகம் செய்யும் பணியை தாம்பரம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கருப்பையாராஜா தொடங்கி வைத்தார். சுகாதார அலுவலர் மொய்தீன் ஆய்வாளர்கள் சிவகுமார், சாமுவேல் உடனிருந்தனர்.