ஊரடங்கு முடியும் வரை தொழில் நிறுவனங்களில் கடன் தவணை செலுத்த விலக்கு கோரி ஐகோர்ட்டில் மனு: ரிசர்வ் வங்கி, தொழில்கள் துறைகள் பதிலளிக்க உத்தரவு

சென்னை: ஊரடங்கு முடியும் வரை தொழில் நிறுவனங்களில் கடன் தவணை செலுத்த விலக்கு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட 205 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,447 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 239 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் முடக்கத்தை  மத்திய அரசு கடந்த மாதம் 25ம் தேதி அமல்படுத்தியது.

இது, வரும் 14ம் தேதியுடன் முடிகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நடுத்தர, ஏழை மக்கள் வருவாய் இன்றி சிரமப்படுகின்றனர். இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு வங்கி கடன் தவணை தொகை செலுத்த வேண்டியதில்லை என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் வங்கியில் வழக்கம்போல் மாதந்தோறும் கடன் தவணை செலுத்தும் நாளில் வாடிக்கையாளரின் சேமிப்பு கணக்கில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் ஊரடங்கு முடியும் வரை தொழில் நிறுவனங்களில் கடன் தவணை செலுத்த விலக்கு கோரிசென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ரிசர்வ் வங்கி, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர். ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்துள்ளதாக கோவர்தன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன் தவணை செலுத்த விலக்கு கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: