கொரோனாவை தெறிக்கவிட்ட சிங்க பெண்கள்; வைரசை கையாலும் யுக்தினால் உலகநாடுகளின் பார்வையில் 6 பெண் பிரதமர்கள்...இணையத்தில் பாராட்டு

உலக அளவில் கொரோனா பரவல் விவகாரத்தில் பெண்கள் ஆட்சி செய்யும் நாடுகளில் சிறப்பாக கையாளப்படுகிறது என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அந்நாட்டுத் தலைவர்களுக்கு பாராட்டிவருகின்றனர். சீனாவில் வுகான் நகரத்தில்  தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது, ஐரோப்பிய நாடுகள் கொரோனா வைரஸின் மையமாக இருந்துவருகிறது. அதேபோல, அமெரிக்காவும் கொரோனா வைரஸால் மிகக் கடுமையாகப்  பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜெர்மனி, ஃபின்லாந்து, பெல்ஜியம், நியூசிலாந்து, ஐஸ்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகள் சிறப்பாக கையாண்டுள்ளன என்றும் இந்த நாடுகளுக்கு உள்ள ஒற்றுமை இந்த ஆறு நாடுகளையும் பெண்கள்  தலைமைதாங்கி வழிநடத்துகிறார்கள் என்று நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

நியூசிலாந்து பிரதமர் ஜாசின்டா அர்டெர்ன், கொரோனா வைரஸ் விவகாரத்தை சிறப்பாக கையாள்கிறார் என்பதை விவரிக்க வாஷிங்டன் போஸ்ட் தலைப்பை வைத்து புரிந்துகொள்ளலாம். அதில், நியூசிலாந்து கொரோனா வளைவை  தட்டையாக்கவில்லை. மாறாக அடித்து நொறுக்கியுள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.அந்த நாட்டில் தொடர்ச்சியாக இரண்டு நாள்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கொரோனா பாதிப்பு குறித்து  அவர் தெரிவித்த ஒரு கூற்று பரவாலகப் பேசப்பட்டது. உங்களுக்கு கொரோனா பாதித்தது போன்று செயல்படுங்கள் என்பதுதான் அது.

அதேபோல, ஜெர்மனியின் பிரதமராக ஏஞ்ஜெலா மேர்கல் இருக்கிறார். அவரும் கொரோனா வளைவை தட்டையாக்கியுள்ளார். ஜெர்மனியில் 1,18,235 பேர் கொரோனாவால் பாதிகப்பட்டுள்ளநிலையிலும், ஜெர்மனியில் 52,407 பேர் கொரோனா  வைரஸிலிருந்து மீண்டுள்ளனர். ஜெர்மனியில் குணமடைபவர்கள் 95 சதவீதமாக உள்ளனர். அவர், மார்ச் 11-ம் தேதியிலிருந்தே சமூக இடைவெளி குறித்து வலியுறுத்தி வந்தார். ஜெர்மனியில் மூன்றில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்  என்று மேர்கெல் பேசியது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜெர்மனி வாரத்துக்கு 5 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை மேற்கொண்டுள்ளது. இது மற்ற ஐரோப்பிய நாடுகளைவிட மிகவும் அதிகம். அரசு அறிவித்த சமூக  இடைவெளி மிகவும் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டது. பொருளாதாரத்துக்கா 1.1 டிரில்லியன் பணம் செலவிடப்பட்டது. மேர்கெலையும், நியூயார்க் டைம்ஸ் பாராட்டி செய்தி வெளியிட்டது.

பெல்ஜியத்தின் பிரதமர் சோபி வில்மெஸ் இருந்துவருகிறார். பெல்ஜியத்தில் கொரோனா பாதிப்பு இதுவரையில் குறையவில்லை. இருப்பினும், அவர்களின் இறப்பு விகிதம் 50 சதவீதம் குறைந்துள்ளது. கொரோனா இறப்பு 10 பேரை எட்டிய  நிலையில், வில்லியம்ஸ் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துவிட்டார். அதேபோல, பிரதமர் சன்னா மாரின் தலைமையிலான ஃபின்லாந்தில் ஏப்ரல் 6-ம் தேதியிலிருந்து தினசரி இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. குணமடைந்தவர்களின் விகிதம்  88 சதவீதமாக உள்ளது. அந்த நாட்டில், ஊரடங்கு உத்தரவு மேலும் ஒரு மாத காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் காட்ரின் ஜகோப்ஸ்டாட்டிர்ஸ் தலைமையிலான ஐஸ்லாந்தில், 99 சதவீதம் பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். கொரோனா பாதித்த பொருளாதாரத்துக்கு 1.6 பில்லியன் டாலர் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் 75  சதவீத மக்களுக்கு அடுத்த இரண்டரை மாதத்துக்கான சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

டென்மார்க்கின் பிரதமராக மெட்டி ஃபிரிடெரிக்சென் இருந்து வருகிறார்.டென்மார்க்கிலும், ஏப்ரல் 6-ம் தேதியிலிருந்து பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: