ஏப்ரல் - மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைத்தது அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை : ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் அறிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படக்கூடிய 525 தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது தொடர்பான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்பால் இந்தியாவில் 16வது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைத்து நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளை தவிர அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு அறிவித்தது.

தேர்வு எழுதாமல் மாணவர்கள் அனைவரும் அடுத்த வகுப்புகளுக்கு உயர்ந்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில், கல்லூரி மாணவர்களுக்கும் பாடங்களை ஆன்லைன் மூலம் நடத்தலாம் சென்னை பல்கலை. முன்னதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா பரவல் குறித்த அச்சம் காரணமாகவும், 144 தடை உத்தரவு அமலில் இருப்பதன் காரணமாகவும் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்த அட்டவணை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 144 தடை அமல் முடிவுக்கு வந்தபிறகு, செமஸ்டர் தேர்வுகள் தொடர்பான புதிய அட்டவணை வெளியிடப்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: