சிஎஸ்ஆர் நிதியை பெரு நிறுவனங்கள் கொரோனா பாதிப்புக்கு அளிக்க வேண்டும்: முதல்வர் எடப்பாடி வேண்டுகோள்

சென்னை: கோவிட்-19 தொற்று எதிர்கொண்டு, சமாளிப்பதற்கான பணிகளைக் கருத்தில் கொண்டு, நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு மனம் உவந்து பங்களிப்பு அளிக்க தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நிதியை பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியாக கணக்கிட தெளிவுரை வழங்குமாறு பல்வேறு நிறுவனங்கள் கோரியுள்ளது. மத்திய அரசின் பெருநிறுவன விவகாரங்கள் துறை தனது சுற்றறிக்கை மார்ச் 23ம் தேதியில் குறிப்பிடப்பட்டுள்ள மக்கள் நலம் பேணுதல், மேம்படுத்துதல்,

சுகாதாரம், நோய்த் தடுப்பு, தூய்மைப்பணி, பேரிடர் மேலாண்மை ஆகிய இனங்களின் கீழ் கோவிட்-19 வைரஸ் தடுப்புப் பணிகளுக்கு அளிக்கப்படும் நிதியும், பெருநிறுவன சமூக பொறுப்பு பங்களிப்பிற்கு தகுதி பெறும் என தெளிவுரை வழங்கியுள்ளது.  எனவே, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் 24.3.2020 நாளிட்ட ஆணையின்படி 24.3.2020 முதல் 30.6.2020 வரை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கிடைக்கப்பெறும் நன்கொடையைக் கொரோனா தொற்று நோய் தடுப்பு பணிகளுக்குப் பயன்படுத்திட தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.  தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்தல், மருத்துவமனைக்கு தேவைப்படும் நுகர்பொருட்கள் மற்றும் வென்டிலேட்டர் முதலிய மருத்துவ உபகரணங்கள் வாங்குதல், தனிமைப்படுத்துதல் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வசதி,

பொது சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் தடுப்பு சுகாதார பராமரிப்பு உருவாக்குதல், வீடற்ற ஏழைகள் மற்றும் புலம்பெயர்ந்த பணியாளர்களுக்கு உணவளித்தல், உலர் உணவுப் பொருட்களை வழங்குதல் ஆகியவற்றுக்கு பயன்படுத்தலாம். எனவே, பெருநிறுவனங்கள் மற்றும் இதர தொழில் நிறுவனங்கள் இதன் மூலம் கிடைக்கும் வருமான வரிச் சலுகையை கருத்தில் கொண்டு, கோவிட்-19 தடுப்புப்பணிகளை இன்னும் சிறப்பாக மேற்கொள்ள வசதியாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கி அரசுக்கு தங்களது ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றன. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: