சென்னை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு அமலில் இருப்பதால் நீதிமன்றங்களும் மூடப்பட்டன. முக்கியமான வழக்குகள் மட்டுமே பட்டியலிடப்பட்டு ஜூம் ஆப் என்ற வலைத்தளத்தின் வாயிலாக விசாரிக்கப்பட்டு வருகிறது. நீதிமன்றங்கள் செயல்படாததால் ஏராளமான வக்கீல்களுக்கு வருமானம் இல்லாமல் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர்கள் தமிழ்நாடு-புதுச்சேரி பார்கவுன்சிலிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, வக்கீல்களின் கோரிக்கை குறித்து ஆலோசனை நடத்த தமிழ்நாடு-புதுச்சேரி பார்கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், அகில இந்திய பார்கவுன்சில் இணை தலைவர் எஸ்.பிரபாகரன் உள்ளிட்ட பார்கவுன்சில் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதுகுறித்து பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் கூறும்போது, ‘ஊரடங்கால் வருமானமின்றி கஷ்டப்படும் வக்கீல்களுக்கு உதவித்தொகை வழங்குவது குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. இந்த நிவாரண நிதிக்கு பார்கவுன்சில் உறுப்பினர்கள் குறிப்பிட்ட தொகையை செலுத்த முடிவு செய்யப்பட்டது. வக்கீல்களுக்கு அளவுகோல் அடிப்படையில் நிதி உதவி வழங்கப்படும்’ என்றார்.