கொரோனா தடுப்பு பணி சென்னையில் வீடு வீடாக ஆய்வு: காய்ச்சல், சளி உள்ளவர்கள் கணக்கெடுப்பு

சென்னை : கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணியாக சென்னையில் உள்ள அனைத்து வீடுகளிலும் காய்ச்சல், சளி உள்ளவர்களை கணக்கெடுக்கும் பணியை சென்னை மாநகராட்சி துவக்கியுள்ளது. சென்னை மாநகராட்சியில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை 88 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கனை கண்டறிந்து சோதனை செய்யும் பணியில் சென்னை மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. மேலும் இவர்கள் வசித்த பகுதியில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில்  உள்ள வீடுகளில் வசிப்பவர்களிடம் ஆய்வு நடத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஆய்வு நடத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்தது. சென்னையில் உள்ள 10 லட்சம் கட்டிடங்களில் 75 - 100 கட்டிடங்கள் உள்ள பகுதிகளாக பிரிக்கப்பட்டது. இதன்படி 13,100 பகுதிகள் உருவாக்கப்பட்டது. சென்னை மாநகராட்சியில் 16 ஆயிரம் ஊழியர்கள் தினசரி காலை இந்த வீடுகளை சென்று ஆய்வு நடத்திவருகின்றனர். இந்த ஆய்வு படிவத்தில் கதவு எண், குடும்பங்களின் எண்ணிக்கை, ஆண், பெண், காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள், சளி அறிகுறி உள்ளவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை வியாதி உள்ளவர்கள், மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நபர்கள், தொடர்பு எண் உள்ளிட்ட தகவல்களை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் சேகரித்து வருகின்றனர். இந்த ஆய்வு நேற்று தொடங்கியது. தினசரி அடிப்படையில் தொடர்ந்து 90 நாட்களுக்கு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

Related Stories: