சென்னை: கொரோனா நோய்க்கு ஓரே தீர்வு மக்கள் ஒத்துழைப்பு தான் என்றும், நிவாரண நிதி மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்காக முதல்வர் ₹3280 கோடி நிதி ஒதுக்கியுள்ளார் என்று வருவாய், பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சென்னையில் நேற்று அளித்த பேட்டி:கொரோனா நோயில் இருந்து தமிழக மக்களை பாதுகாக்க வருமுன் காப்போம் என்ற திட்டம் மூலம் முதல்வர் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து வருகிறார். பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ₹500 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டதையடுத்து, அது துறை ரீதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது வரை ₹405 கோடி வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டும் இல்லாமல் பொது மக்களுக்கு ₹3280 கோடி செலவில் நிவாரண நிதி மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்காக முதல்வர் நிதி ஒதுக்கியுள்ளார்.
கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க இதுவரை 11 கூட்டங்களை முதல்வர் நடத்தியிருக்கிறார்.