சாலையில் சென்ற மாடு மீது பைக் மோதி மருந்து விற்பனையாளர் பலி

பூந்தமல்லி: வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், குறிஞ்சி நகர் 4வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன் (45). இவர் அதே பகுதியில் மருந்து கடை நடத்தி வந்தார். மேலும், பல்வேறு கடைகளுக்கு மருந்துகள் சப்ளை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பூந்தமல்லியை அடுத்த திருமழிசையில் உள்ள ஒரு கடைக்கு மருந்துகள் சப்ளை செய்துவிட்டு இரவு வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். திருமழிசை கூட்டு சாலை, நசரத்பேட்டை அருகே வந்தபோது திடீரென சாலையை கடந்த மாட்டின் மீது எதிர்பாரத விதமாக பைக் மோதியது.

இதில் நாகராஜன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் சம்பவ இடத்திலேயே மாடும் பறிதாபமாக இறந்துபோனது. இதுகுறித்து தகவல் அறிந்த அங்கு வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து போன மாட்டை மீட்டு வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: