திருவொற்றியூர்: எண்ணூர் ராமமூர்த்தி நகரில் மளிகை கடை நடத்தி வரும் சகோதரர்கள் இருவர், கடந்த மாதம் டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியதாக திருவொற்றியூர் மண்டல சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அதிகாரிகள் இரு தினங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட சகோதரர்கள் இருவரையும் ஸ்டான்லி மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதில், சகோதரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, நேற்று காலை எண்ணூர் போலீசார் ராமமூர்த்தி நகருக்கு வந்து, சம்பந்தப்பட்ட சகோதரர்களின் வீட்டுக்கு அருகே உள்ள தெருக்களை மூடினர்.