21 நாள் ஊரடங்கு முடிந்து மீண்டும் பஸ் பாஸ் வாங்க வேண்டுமா?: கவலையில் எம்டிசி பயணிகள்

சென்னை: சென்னை மாநகர பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு மாதாந்திர பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இதனை 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதற்காக மாதம் ₹1000 வசூல் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி புதிய பாஸ் வழங்கப்படும். இந்நிலையில் இந்த மாதம் வழங்கப்பட்ட பாஸ் ஏப்ரல் 15ம் தேதியோடு முடிய உள்ளது. ஆனால் ஊரடங்கு உத்தரவால் பஸ்கள் இயக்கப்படவில்லை. மக்களும் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். 21 நாள் பாஸ் பயன்படாமலே உள்ளது. எனவே வரும் 14ம் தேதி ஊரடங்கு முடிந்து,மக்கள் மீண்டும்  வெளியே வரும்போது, அந்த பாசையே பயன்படுத்தலாமா, அல்லது மீண்டும் 1000 ரூபாய் கொடுத்து புதிய பாஸ் வாங்க வேண்டுமா என எம்டிசி நிர்வாகம் அறிவிப்பு ஏதும் வெளியிடாததால் பயணிகள் குழப்பத்தில் உள்ளனர்.

1000 ரூபாய் கொடுத்து வாங்கிய மார்ச், ஏப்ரல் மாத பாசை யாரும் சரியாக பயன்படுத்தாததால், அதே பாசை பயன்படுத்தலாம் என அறிவிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். ஏன் என்றால், பலர் வேலைக்கு செல்லாமல், பணத்திற்காக கடும் அவதியடைந்து மீண்டும் வேலைக்கு செல்லும் நேரத்தில் மீண்டும் 1000 ரூபாய் கொடுத்து பாஸ் வாங்குவது சிரமம் என்று கூறுகின்றனர்.

Related Stories: