திமுக மீது திட்டமிட்டு அவதூறும் பரப்பும் பாஜ கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.100 கோடி வழங்க வக்கீல் நோட்டீஸ்: திமுக தலைமை அறிவிப்பு

சென்னை: திமுக மீது திட்டமிட்டு அவதூறு பரப்பும் பாஜ கட்சி, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ₹100 கோடி வழங்க வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக மீது அவதூறு பரப்பி அதன் மூலம் ஏதாவது அரசியல் லாபம் அடையலாமா எனத் தமிழக பாஜ செயல்பட்டு வருகிறது. திமுக அறக்கட்டளை சார்பில் ₹ 1 கோடி, திமுக எம்எல்ஏக்கள் மற்றும் எம்பி.,க்கள் தங்களது ஒரு மாதச் சம்பளத்தையும் வழங்கியுள்ளனர். அதோடு, தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தும் பணத்தை ஒதுக்கியுள்ளனர். மேலும் திமுக தலைமை நிலையமான ‘அண்ணா அறிவாலயத்தின்’ வளாகத்தில் அமைந்துள்ள ‘கலைஞர் அரங்கை’ கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ளப் பயன்படுத்திக் கொள்ளவும் வழங்கியுள்ளது.

திமுக நிர்வாகிகளும் தங்களால் இயன்றவரை உதவிகளை அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவி வருகின்றனர். இவை அனைத்தையும் ‘முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது’ போல், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு திமுக எதுவுமே செய்யவில்லை என தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாக பாஜ அவதூறு பரப்பி வருகிறது.இப்படி அவதூறு பரப்பும் பாஜ, கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கான ‘தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு’ ₹100 கோடி வழங்கிட வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி சார்பாக, வழக்கறிஞர் வில்சன், பாஜ தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, தமிழக பாஜ தலைவர் எல்.முருகன், டிவிட்டர் நிறுவனத்தின் சர்வதேச தலைமை நிர்வாகி, டிவிட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஆகியோருக்கு ‘வக்கீல் நோட்டீஸ்’ அனுப்பியுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: