144 தடை உத்தரவு விவசாய பணிக்கான தடை நீக்கம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள், ஷாப்பிங் மால்கள், பெரிய கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. விவசாய பணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டி:

விவசாய பொருட்கள் கொள்முதல் நிறுவனங்கள், விவசாய விளைபொருட்கள் மார்க்கெட் கமிட்டி நடத்தும் மண்டிகள் செயல்பட விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது. அதேபோல உர விற்பனை நிலையங்கள், விவசாய பணிகள் மற்றும் விவசாய கூலிப்பணி, விவசாய இயந்திரங்கள் வாடகை மையங்கள், உரம், விதைகள், பூச்சிக்கொல்லி தயாரிப்பு மற்றும் பேக்கிங் நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும். மாநிலம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான விவசாயம் மற்றும் தோட்டக்கலை சார்ந்த இயந்திரங்களின் இயக்கத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்படுகிறது. இந்த பணிகளை தொடரலாம்.

Related Stories: