சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர், ஆடாதொடை மணப்பாகு போன்ற 3 மருந்துகளை சித்த மருத்துவர்கள் மற்றும் ஆயுஷ் துறை பரிந்துரை செய்துள்ளது. 15 வகை அரிய மூலிகைகளை கொண்டு சித்த மருத்துவ முறைப்படி தயாரிக்கப்படும் இந்த கபசுர குடிநீரை வெறும் வயிற்றில் காலை நேரத்தில் பருக வேண்டும். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 15-20 மி.லி.,யும் அதற்கு மேல் உள்ளவர்கள் 60 மி.லி.,யும் குடிக்கலாம். இந்த கபசுர குடிநீர் கீழ்ப்பாக்கம் மற்றும் ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் வழங்கப்பட்டு வருகிறது. அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும் இந்த கபசுர குடிநீர் தினம் 100 லிட்டருக்கு மேல் இலவசமாக வழங்கப்படுகிறது.